அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் நக்சல் தொடர்பு வாலிபர் கைது: கியூ பிரிவு போலீஸ் விசாரணை
கூடங்குளம்: நெல்லையில் நடந்த அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் நக்சல்களுடன் தொடர்புடைய வாலிபர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் நக்சல்கள் ஆதிக்கம் உள்ளதா என கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு தமிழக அரசு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்க போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். கடந்த 19ம் தேதி கூடங்குளம் பகுதிகளில் 5,000 போலீசார் குவிக்கப்பட்டனர்.
சட்டம், ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஜார்ஜ் உத்தரவுப்படி தென் மண்டல ஐ.ஜி. ராஜேஷ் தாஸ் தலைமையில் 4 டி.ஐ.ஜி.க்கள், 10க்கும் மேற்பட்ட எஸ்.பி.க்கள் கூடங்குளத்தில் முகாமிட்டனர். 54 கம்பெனி போலீசார், துணை ராணுவப்படை வீரர்கள் கூடயங்குளம் பகுதியில் முகாமிட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அணு மின் நிலையம் முன்பு கலவர தடுப்பு சிறப்பு அதிரடிப்படை போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே நக்சல் அமைப்புடன் நெருங்கிய தொடர்புடைய முன்னாள் பொடா கைதி சேலத்தைச் சேர்ந்த சதீஷ் குமார்(35) நெல்லையில் அணு உலை எதிர்ப்புக் குழுவினர் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றபோது கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து நக்சல் அமைப்புக்கும், கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக்குழுவிற்கும் இடையே உள்ள தொடர்புகள் குறித்து விசாரிக்க கியூ பிரிவு போலீசார் கூடங்குளத்தில் முகாமிட்டுள்ளனர். போராட்டத்தில் தீவிரம் காட்டிய இளைஞர்களுக்கு தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என தீவிர விசாரணை நடக்கிறது.