கொலையாளிகள் பயன்படுத்தியதாக கருதப்பட்ட வேன் பாதிரியாருடையதாம்!
திருச்சி: ராமஜெயத்தைக் கொன்ற கொலையாளிகள் பயன்படுத்தியதாக கருதப்பட்ட டெம்போ டிராவலர் வேன் ஒரு பாதிரியாருக்குச் சொந்தமானது என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து வேனை பாதிரியாரிடம் போலீஸார் ஒப்படைத்து விட்டனர்.
ராமஜெயம் நேற்று காலை வாக்கிங் போனபோது வேன் மூலம் கடத்தப்பட்டார். பின்னர் அவரது உடல் கல்லணை அருகே திருவளர்ச்சோலை என்ற இடத்தில் புதரில் வைத்துக் கண்டுபிடிக்கப்பட்டது. கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன. தலையில் வெட்டுக் காயம் காணப்பட்டது.
வேனுக்குள் வைத்தே ராமஜெயம் கொலை செய்யப்பட்டதாகவும், பிணத்தை வீசி விட்டு வேனில் கொலையாளிகள் தப்பிச் சென்றதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் சமயபுரம் அருகே ஒரு இடத்தில் அனாதையாக நின்ற டெம்போ டிராவலரை போலீஸார் கைப்ப்ற்றினர். அது கொலையாளிகள் பயன்படுத்தியதாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீஸார் தீவிரமாக விசாரணையில் இறங்கினர்.
வேன் சென்னையில் பதிவு செய்யப்பட்டதாகும். அதன் உரிமையாளர் யார் என்று ஆர்.டி.ஓ அலுவலகம் மூலம் விசாரித்தபோது, திருச்சி, ஸ்ரீரங்கம், சஞ்சீவி நகரைச் சேர்ந்த செபாஸ்டியன் என்பவருக்குச் சொந்தமானது என்று தெரிய வந்தது. அவர் ஒரு பாதிரியார்.
செபாஸ்டியனிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, தான் அந்த வேனில் பயணித்ததாகவும், பழுது ஏற்பட்டதால் நிறுத்தி விட்டு வந்து விட்டதாகவும் கூறினார். இதையடுத்து வேனை போலீஸார், பாதிரியாரிடம் ஒப்படைத்தனர்.
சிக்கிய வேன் கொலையாளிகள் பயன்படுத்திய வேன் இல்லை என்று தெரிய வந்துள்ளதால் விசாரணையில் தற்போது திடீர் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.