ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டாம்: இந்தியா,சீனாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
அணு ஆயுதம் தயாரிப்பு விவகாரத்தால் ஈரான் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்து இருக்கின்றன. மேலும் ஈரானை தனிமைப்படுத்தும் முயற்சியாக அந்நாட்டில் இருந்து மற்ற நாடுகளும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
இதை நடைமுறைப்படுத்தவில்லை என்றால் இந்த நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதற்கு ஜுன் மாதம் வரை கெடு விதித்து இருக்கிறது.
தற்போது இந்தியா, சீனா, துருக்கி, தென்கொரியா உள்ளிட்ட 12 நாடுகள் பெரும் அளவில் ஈரானில் இருந்து தான் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகின்றன. எனவே 12 நாடுகளுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இப்பிரச்சினை குறித்து கூறியிருப்பதாவது:
உலக அளவில் கச்சா எண்ணெய் சந்தை நிலவரம் மற்றும் ஈரானில் இருந்து பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்வதை குறைப்பது ஆகியவை தொடர்பாக தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இந்த விவகாரத்தில் விரைவில் உறுதியான முடிவுக்கு வர முடியும். தற்போது ஈரான் தவிர்த்து சர்வதேச சந்தையில் போதுமான அளவிற்கு கச்சா எண்ணெய், பெட்ரோலிய பொருட்கள் இருக்கிறது.
இதனால் ஈரானில் இருந்து பெரும் அளிவில் இறக்குமதியை குறைப்பதில் பிரச்சினை ஏற்படாது. எனவே ஈரான் பெட்ரோலிய பொருட்கள் மூலம் வருவாய் திரட்டுவதை தடுக்க வேண்டும். இந்தியா, சீனா போன்ற நாடுகள் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என்றார் அவர்.
மேலும் அமெரிக்க அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் ஜாய் கார்னிய் கூறுகையில், இந்த பிரச்சினை தொடர்பாக பல்வேறு நாட்டுத்தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதன் மூலம் ஈரானை புறக்கணிக்கும் முடிவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்தியா, சீனா ஆகிய நாடுகளுடன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்' என்றார்.