பன்றிக் காய்ச்சலுக்கு கோவையில் ஒருவர் பலி-சென்னையில் 4 பேர் பாதிப்பு
கோவை: தமிழகத்தில் மீண்டும் பன்றிக் காய்ச்சல் தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ளதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். கோவையில் முதியவர் ஒருவர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளார். சென்னையில் இதுவரை நான்கு பேருக்கு பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது.
தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையிலிருந்துதான் பன்றிக் காய்ச்சல் பரவி தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் பலரது உயிரைக் காவு வாங்கியது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பன்றிக் காய்ச்சல் பரவ ஆரம்பித்துள்ளது.
கோவையில் முதல் பலி ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்தவர் 75 வயதான கந்தசாமி. இவர் காய்ச்சல் காரணமாக காங்கேயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு நோய் குணமாகவில்லை. இதையடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொண்டைவலி, சளி, காய்ச்சல் காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவரது ரத்தப் பரிசோதனையில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவர் உயிரிழந்தார்.
சென்னையில் 4 பேருக்கு
இதற்கிடையே, சென்னையில் 4 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு அரசினர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேர் நோய் பாதிப்பு குறித்துத் தெரிந்ததும் மருத்துவமனையிலிருந்து தப்பி விட்டனர். அவர்களைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட மருத்துவமனைகளுக்கு அவசர உத்தரவு
பன்றிக் காய்ச்சல் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதால் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறை அவசர உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதில், சளி, காய்ச்சல் காரணமாக வரும் அனைவருக்கும் பன்றிக் காய்ச்சல் சோதனை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பன்றிக் காய்ச்சலுக்குத் தேவையான மாத்திரைகளை போதிய அளவில் இருப்பு வைத்துக் கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.