தமிழகத்தில் இன்று முதல் 'கரண்ட் பில்' ஜாஸ்தி!
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இன்று முதல் புதிய கட்டண விகிதத்தில் பயணிகள் பயணிக்க வேண்டும். அதேபோல மத்திய பட்ஜெட்டிலும், தமிழக பட்ஜெட்டிலும் அறிவிக்கப்பட்ட அனைத்து உயர்வுகளும் அமலுக்கு வந்துள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரை முக்கியமாக, இன்று முதல் புதிய மின் கட்டண விகிதம் அமலுக்கு வந்துள்ளது.
2 நாட்களுக்கு முன்புதான் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய மின் கட்டண விகிதத்தை அறிவித்தது. அதன்படி இதுவரை இருந்த 7 சிலாபுகள் என்ற நிலையை மாற்றி நான்காக குறைத்து மின்சாரக் கட்டணத்தை திருத்தியமைத்துள்ளனர்.
இந்தப் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. புதிய முறைபப்டி 100 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ. 1.10 என்று கட்டணம் வசூலிக்கப்படும். இதுவரை குறைந்தபட்ச கட்டணமாக 75 பைசா என்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 500 யூனிட்டுகளுக்கு மேல் போனால் யூனிட்டுக்கு ரூ. 5.75 வசூலிக்கப்படும்.
மார்ச் 31ம் தேதி வரை பயன்படுத்திய மின்சாரத்திற்குப் பழைய கட்டணத்தை வசூலிப்பார்களாம். ஏப்ரல் 1ம் தேதி முதல் பயன்படுத்தும் கட்டணத்திற்குப் புதிய கட்டணத்தை வசூலிப்பார்களாம்.
மின் கட்டணம் உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு மின்சாரம் சார்ந்த தொழில்களின் உற்பத்தி் செல்வும், தொடர்ந்து விற்பனை விலையும் கிடுகிடுவென அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்தமாக பல்வேறு பொருட்களின் விலையும் கடுமையாக உயரப் போகின்றன.
இதேபோல தமிழக அரசின் மோட்டார் வாகன வரி உயர்வும் கூட இன்று முதல் உயர்ந்துள்ளது.