புதுக்கோட்டை இந்திய கம்யூ. எம்.எல்.ஏ முத்துக்குமரன் சாலை விபத்தில் மரணம்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்துக்குமரன் புதுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். இவரது வீடு புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ளது.
அன்னவாசல் பகுதியில், தனது கட்சித் தொண்டர் பழனிச்சாமி என்பவர் வீட்டில் துக்க சம்பவம் நடந்ததால், துக்கம் விசாரிப்பதற்காக இன்று காலை காரில் கிளம்பினார்.
சொக்கநாதன்பட்டி என்ற இடத்திற்கு அருகே ஆரியூர் என்ர இடத்தில் கார் போய்க் கொண்டிருந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. டிரைவர் காரை நிறுத்த கடுமையாக முயன்றார் ஆனால் முடியவில்லை. காரை சாலையோரமாக வேகமாக தலைகுப்புற கவிழ்ந்து விழுந்தது.
இதில் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே எம்.எல்.ஏ. உயிரிழந்தார். டிரைவரும், காரில் பயணித்த இன்னொருவரும் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் காருக்குள் பிணமாக கிடந்த எம்.எல்.ஏவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
44 வயதான முத்துக்குமரனுக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். பி.காம் படித்தவரான இவர் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். திருவிராங்குளம் பஞ்சாயத்து யூனியன் உறுப்பினராக செயல்பட்டுள்ளார். சட்டசபைக்கு முதல் முறையாக கடந்த பொதுத் தேர்தலின்போது தேர்ந்தெடுக்கப்பட்டவர் முத்துக்குமரன்.
6 மாதத்திற்குள் இடைத் தேர்தல்
புதுக்கோட்டை சட்டசபை உறுப்பினர் முத்துக்குமரன் மறைவைத் தொடர்ந்து அந்தத் தொகுதி காலியாகியுள்ளது. இங்கு 6 மாதத்திற்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நடைபெறவுள்ள 3வது இடைத் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கதது. இதற்கு முன்பு திருச்சி மேற்கு, சங்கரன்கோவில் ஆகிய தொகுதிகளுக்கு உறுப்பினர்கள் மறைவால் இடைத் தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக, திமுகவினர் திரண்டு வந்து அஞ்சலி
எம்.எல்.ஏ. முத்துக்குமரன் விபத்தில் பலியான தகவல் கிடைத்ததும், விராலிமலை அதிமுக எம்.எல்.ஏவும், மாவட்டச் செயலாளருமான டாக்டர் விஜயபாஸ்கர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். முத்துக்குமரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உதவினார்.
அங்கு முத்துக்குமரன் உடலுக்கு மாநில ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், ஆலங்குடி அதிமுக எம்.எல்.ஏ. கு.ப.கிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதி, திமுக மாஜி எம்.பி. ராஜா பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. கவிதைப்பித்தன் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.