மேற்கு தொடர்ச்சி மலையில் நக்சலைட்டுகள் நடமாட்டம்: அதிரடிபடையினர் தீவிர வேட்டை
நெல்லை: நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியுள்ளார்களா என்பதை கண்டறிய அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தின் தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நக்சலைட் கும்பல்களின் நடவடிக்கைகளை அவ்வப்போது போலீசார் கண்டறிந்து ஒடுக்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை கன்னியாகுமரி முதல் நீலகிரி மாவட்ட எல்லை வரை உள்ள சுமார் 400கிமீ மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் நக்சலைட்டுகளைப் பிடிக்கவும் மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடுபவர்களை ஒடுக்கவும் தென்மாவட்டங்களில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழக சிறப்பு அதிரடிப்படையின் முகாம் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிரடிப்படையினர் மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக எல்லையின் ஆரம்பம் முதல் நெல்லை மாவட்ட எல்லை வரை அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் நெல்லை மற்றும் விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை மணிமுத்தாறு, ராஜபாளையம் அதிரடிப்படை முகாமில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் நெல்லை, விருதுநகர் மாவட்ட எல்லைக்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ரோந்து சென்று வருகின்றனர்.