2ஜி வழக்கு: என்னாலும் குரலை உயர்த்த முடியும்- ராசாவுக்கு நீதிபதி எச்சரிக்கை
2ஜி ஊழல் வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியாகக் கருதப்படும் மத்திய தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் டி.எஸ்.மாத்தூர் சாட்சியம் அளித்து வருகிறார்.
அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அதன் பிறகு ராசாவும், அவருடைய வழக்கறிஞர் சுஷீல் குமாரும் மாத்தூரிடம் குறுக்கு விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் குரலை உயர்த்திப் பேசினார்கள். அதற்கு நீதிபதி கண்டனம் தெரிவத்ததோடு நீதிமன்றத்தில் அடக்கமாக நடந்துகொள்ளுமாறு அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
குறுக்கு விசாரணை செய்த வழக்கறிஞர் சுஷீல் குமார் உரத்த குரலில் கேள்வி கேட்டது நீதிபதியை கோபமடையச் செய்தது.
உடனே அவர் கூறுகையில், தயவு செய்து குரலை உயர்த்தி பேசாதீர்கள். இல்லையென்றால் நானும் குரலை உயர்த்த வேண்டியிருக்கும். அடக்கமாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ளுங்கள் என்றார்.
விசாரணையின்போது மாததூர் ஒழுங்காக பதில் அளிக்காததால் அவரது சாட்சியத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று சுஷீல் குமார் தெரிவித்தார்.
மத்திய தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளராக இருந்து கொண்டு தொலைத்தொடர்பு கொள்கை நினைவில் இல்லை என்று மாத்தூர் கூறுகிறாரே என்று ராசா ஆத்திரம் அடைந்தார்.