கூடங்குளம் போராட்டக்காரர்களை சந்திக்கக் கூடாது: அச்சுதானந்தனுக்கு கட்சி மேலிடம் தடை
திருவனந்தபுரம்: கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடி வருபவர்களை சந்திக்கக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளதையடுத்து அவர் இடிந்தகரை பயணத்தை ரத்து செய்துள்ளார்.
கேரள முன்னாள் முதல்வரும், சட்டசபை எதிர்கட்சித் தலைவருமான அச்சுதானந்தன் இன்று இடிந்தகரை வந்து கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து போராடி வருபவர்களை சந்தித்து பேசுவதாக இருந்தார். ஆனால் இது குறித்து அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேலிடம் அவரை இடிந்தகரைக்கு செல்லக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் இடிந்தகரை பயணத்தை ரத்து செய்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான அச்சுதானந்தன் அண்மை காலமாக பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவித்து வருகிறார். அவரை கட்சியினரும், பிறரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால் அவர் விரக்தியில் உள்ளார். கட்சியில் பெரிய பதவியான அரசியல் விவகாரக் குழு உறுப்பினர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அவரது வயதைக் காரணம் காட்டி அவருக்கு அந்த பதவியைக் கொடுக்கவில்லை.
மகன் அருண் குமாருக்கு அரசு பணி வழங்கியது, உறவினருக்கு நிலம் ஒதுக்கியது, கட்சியை விட்டு வெளியேறியவர்களை அவதூராகப் பேசியது என்று அவர் பல பிரச்சனைகளில் சிக்கியுள்ளார். இந்நிலையில் கூடங்குளம் போராட்டக்கார்ரகளுக்கு ஆதரவு தெரிவித்துடன் இடிந்கரைக்கு வருவதாகவும் அறிவித்தார். ஆனால் கட்சி மேலிடம் அவரை கூடங்குளத்திற்கு போகவோ, போராட்டக்காரர்களை சந்தித்து பேசவோ கூடாது என்று உத்தரவிட்டுள்ளதால் தற்போது அவர் இடிந்தகரை பயணத்தை ரத்து செய்துள்ளார்.