ஊழல்-முறைகேடுகளில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி: சுப்பிரமணிய சாமி புகார்
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி பல்வேறு ஊழல்-முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
2ஜி வழக்குத் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான அவர் நிருபர்களிடம் கூறுகையில், சிதம்பரத்தின் மகன் கார்த்தி பல வகையான ஊழல்களில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், அது குறித்து இன்டலிஜென்ஸ் பீரோவை விசாரிக்க விடாமல் சிதம்பரம் தடுக்கிறார்.
ராணுவ தளவாட புரோக்கர்களில் கார்த்தியும் அடக்கம். கனரா வங்கியின் லோகோவை மாற்றுவதில் நடந்த ஊழலிலும் கார்த்திக்குத் தொடர்புண்டு. மேலும் துபாய், பஹ்ரைன் போன்ற நாடுகளிலும் கார்த்தியின் செயல்பாடுகள் அடக்கம்.
2ஜி விவகாரத்தில், ப.சிதம்பரத்தை ஏன் விசாரிக்க வேண்டும் என்ற வாதத்தை வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் முன் வைப்பார். அவரைத் தொடர்ந்து அலைக்கற்றை வழக்கில் எதிரியாக ப.சிதம்பரத்தைச் சேர்க்க வேண்டும் என்ற அவசியத்தை நானும் எடுத்துச் சொல்வேன்.
இந்த வழக்கில் மனுதாரராகிய நானே நேரில் ஆஜராகி வாதிட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்த வழக்கில் ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை சிபிஐ நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதையடுத்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யாமல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளேன். அதற்கான காரணத்தை பிரஷாந்த் பூஷண் வாதாடி முடித்ததும் நீதிமன்றத்தில் தெரிவிப்பேன்.
முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டது. அந்தக் கொள்கையைப் பயன்படுத்திச் பல நிறுவனங்கள் ஆதாயம் அடைந்தன. இதில் ராசாவுக்குச் சமமாக ப.சிதம்பரத்துக்கும் பங்கு உள்ளது என்பதை நிரூபிக்க ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. இந்த வழக்கில் சிதம்பரத்தை எதிரியாகச் சேர்க்கும் வரை ஓய மாட்டேன் என்றார்.