புதுக்கோட்டைக்கு 'பொட்டி' வந்துருச்சு.... தேர்தல் களத்தில் குதித்தது அதிமுக!
புதுக்கோட்டை: தமிழக அரசின் இலவசப் பொருட்கள் அடங்கிய பெட்டிகள் புதுக்கோட்டைக்கு வந்திறங்கத் தொடங்கியுள்ளன. இதன் மூலம் அதிமுகவினர் தங்களது இடைத் தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கி விட்டதாக கருதப்படுகிறது.
புதுக்கோட்டை எம்.எல்.ஏவாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துக்குமரன் ஏப்ரல் 1ம் தேதி நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அவர் இறந்து 11 நாட்கள் கூட ஆகாத நிலையில், இடைத் தேர்தலில் போட்டியிடுவோம் என அதிமுக அறிவித்தது. மேலும் தற்போது தேர்தல் பணிகளையும் தொடங்கி விட்டது. கடந்த 8ம் தேதி செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளது அதிமுக.
இந்த நிலையில் தற்போது தமிழக அரசின் இலவசத் திட்டங்களை இங்கு முழு வீச்சில் செயல்படுத்த தொடங்கியுள்ளனர். மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபைத் தொகுதிகளுக்கும் வழங்குவதற்காக ஏற்கனவே இருப்பு வைக்கப்பட்டுள்ள இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை தற்போது புதுக்கோட்டை தொகுதிக்குத் திருப்பி விட ஆரம்பித்துள்ளனராம்.
இதனால் இந்த இலவசப் பொருட்கள் அடங்கிய பெட்டிகள் புதுக்கோட்டை தொகுதி மக்களுக்கு விநியோகிக்கக் காத்துள்ளன. அத்தனை இலவசப் பொருட்களும் புதுக்கோட்டையை நோக்கித் திரும்பியுள்ளதால் மற்ற 5 தொகுதி மக்களும் அதிருப்தியிலும், ஏமாற்றத்திலும் புலம்பி வருகின்றனராம்.