நில அபகரிப்பு.. தனி போலீஸ் பிரிவு அரசாணையை ரத்து செயய்க் கோரி நடராஜன் மனு!
சென்னை: நில அபகரிப்பு குறித்து விசாரிப்பதற்காக தனி போலீஸ் பிரிவை உருவாக்கி அறிவிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி சசிகலாவின் கணவர் நடராஜன் தாக்கல் செய்த மனு குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு நில மோசடி வழக்குகளில் சிக்கி கைதாகி சிறையில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
நில அபகரிப்பு வழக்குகளை விசாரிப்பதற்காக தனி போலீஸ் பிரிவை உருவாக்கி 28.7.11 அன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. என் மீது நில மோசடி வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அந்த வழக்குகளை தனிப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். என் மீது தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்து எனது அடிப்படை உரிமைகளை போலீசார் மீறுகின்றனர். உள்நோக்கத்துடன் என் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
எனவே, அந்த அரசாணை சட்ட விரோதமானது என்று அறிவிக்க வேண்டும். அந்த அரசாணையை ரத்து செய்து அதனடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்கு போலீசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் கே.என்.பாஷா, பால்வசந்தகுமார் ஆகியோர் அடங்கிய சிறப்பு டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து அரசு பதில் அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை தள்ளி வைத்தனர்.