ஆதரவற்ற பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க மங்கள மாலை திட்டம்'-தமிழக அரசு அறிவிப்பு
சட்டசபையில் சமூகநலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் பா.வளர்மதி கூறுகையில்,
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் பயன்பெற தற்போது வருட வருமானம் ரூ.24,000 என்று உள்ளதால் பயனடைய தடையாக உள்ளது. எனவே அந்த வருமான வரம்பு நீக்கப்படும்.
அரசின் 27 குழந்தைகள் இல்லங்களிலும், 7 சேவை இல்லங்களிலும் உள்ள ஆதரவற்ற பெண்களுக்கும், ஆதரவற்ற பெண் குழந்தைகள் பள்ளிப் படிப்பை முடித்து திருமண வயதை அடையும்பொழுது அவர்களுக்கு திருமணம் செய்ய ஏதுவாக முதல்வர் ஆணைப்படி மங்கள மாலை திட்டம்' தொடங்கப்படும்.
இதன்படி அவர்கள் தகுந்த துணையைத் தேர்ந்தெடுப்பதற்கான சேவையும், திருமண உதவித் திட்டத்தின் கீழ் நிதி உதவியும் அளிக்கப்படும். இது ஆதரவற்ற பெண்களுக்கு பொருத்தமான மணமகன் அமைவதற்கு உதவிபுரிவதோடு, அப்பெண்கள் தவறான நபர்களிடம் சிக்கிக் கொள்வதையும் தடுக்கிறது.
திருநங்கைகளுக்கு ஓய்வூதியம்:
40 வயதிற்கு மேற்பட்ட ஏழ்மை நிலையிலுள்ள ஆதரவற்ற திருநங்கையர்களுக்கு சிறப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கப்படும். அனைத்து அரசு குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் சேவை இல்லங்களுக்கு சலவை இயந்திரங்கள் வழங்கப்படும்.
பட்டம் அல்லது பட்டயம் பெற்ற மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர்களுக்கு திருமண நிதியுதவித் திட்டமாக ரூ.50 ஆயிரம், 4 கிராம் தங்கம் வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளி அரசு சிறப்பு பள்ளிகளில் பயிலும் 1775 மாணவ-மாணவிகளுக்கு 4 இணை சீருடைகள் வழங்கப்படும். மாற்றுத்திறனாளி மாணவர்களின் உணவூட்டுச் செலவினம் ரூ.450லிருந்து ரூ.650 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
சிறப்பு பள்ளிகளில் பயிலும் 12-ம் வகுப்பு பார்வையற்ற மாணவர்களுக்கும், காதுகேளாத மற்றும் வாய்பேச முடியாத மாணவர்களில் மாநில அளவில் முதலிடம் பெறுவோர்க்கு ரூ.18,000லிருந்து ரூ.50,000 ஆகவும், 2ம் இடம் பெறுவோர்க்கு ரூ.12லிருந்து ரூ.30,000 ஆகவும், 3ம் இடம் பெறுவோர்க்கு ரூ.9,000 முதல் ரூ.20,000 ஆகவும், 10ம் வகுப்பில் முதலிடத்திற்கு ரூ.12,000லிருந்து ரூ.25,000 ஆகவும், 2ம் இடத்திற்கு ரூ.9,000லிருந்து ரூ.20,000 ஆகவும், 3ம் இடத்திற்கு ரூ.6,000லிருந்து ரூ.15,000 ஆகவும் வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் பணியாற்றும் 1,014 சிறப்பு ஆசிரியர்களுக்கு மாத சம்பளம் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். கால் மூட்டுக்கு மேல் இழந்த மற்றும் கைகளை இழந்த தலா 100 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை அவயம் வழங்கப்படும். 5,000 பார்வையற்றோருக்கு ஒளிரும் மடக்கு குச்சிகள் வழங்கப்படும் என்றார்.