திருச்சி-நெல்லை இன்டர்சிட்டி ரயிலை நாகர்கோவில் வரை இயக்க கோரிக்கை!
நாகர்கோவில்: திருச்சி-திருநெல்வேலி பகல் நேர இன்டர்சிட்டி ரயிலை நாகர்கோவில் வரை இயக்க நடவடிக்கை எடுக்குமாறு கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கும், குமரி எம்.பி.க்கும் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சங்கத்தின் தலைவர் எஸ்.ஆர். ஸ்ரீராம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தின் தென்கோடியில் அமைந்துள்ள சிறிய மாவட்டமாகும். குமரி மாவட்டம் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக மக்கள்தொகை அடர்த்தி நிறைந்த மாவட்டம் ஆகும்.
குமரி மாவட்ட பயணிகள் ஆயிரக்கணக்கானோர் திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல்,திருச்சி போன்ற இடங்களுக்கு வேலைவாய்ப்பிற்காகவும், மேற்கல்விக்காகவும், வணிக சம்மந்தமாகவும் தினசரி பயணம் செய்கின்றனர்.
மதுரையில் உயர் நீதிமன்றம், வேலைவாய்ப்பு அலுவலகம், திருநெல்வேலியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம், பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு தினசரி நூற்றுகணக்கான பேர் செல்கின்றனர்.
நாகர்கோவிலில் இருந்து காலை 7:30 மணிக்கு அடுத்து மாலை 5:30 மணிக்கு தான் திருநெல்வேலி, மதுரை மார்க்கம் தினசரி ரயில் வசதி உள்ளது. இதை போல் மறுமார்க்கத்தில் மதுரை, திருச்சியில் இருந்து அதிகாலையிலிருந்து மதியம் வரை எந்த ஒரு தினசரி ரயில் வசதியும் இல்லை.
ரயில்வே பட்ஜெட்டில் திருச்சி- திருநெல்வேலி வழி தடத்தில் பகல் நேர இன்டர்சிட்டி ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கபட்டது. தமிழகத்தில் இரண்டு நகரங்களுக்கு இடையே இயக்கபடும் முதல் பகல்நேர இன்டர்சிட்டி ரயில் இது ஆகும்.
இந்த ரயில் திருச்சியில் இருந்து காலையில் புறப்பட்டு மதியம் திருநெல்வேலி வந்து சேர்ந்து மதியம் திருநெல்வேல் இருந்து புறப்பட்டு இரவு திருச்சி செல்லும்
வகையில் இயக்கபட உள்ளது. இதில் முன்பதிவு செய்யப்படும் இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகளும், குளிர்சாதன வசதி உடைய சாய்வு இருக்கை பெட்டிகளும் இருக்கும்.
இந்த ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்து இயக்க போதுமான வசதி வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இந்த ரயிலை ஜுலை மாதம் வெளியிடப்படும் ரயில் கால அட்டவணையில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்து இயக்க நடவடிக்கை எடுக்குமாறு கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பாக மத்திய அரசையும், தென்னக ரயில்வே நிர்வாகத்தையும் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.