அழகிரிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மீண்டும் சம்மன்-20ம் தேதி ஆஜராக உத்தரவு!
மதுரை: தயா என்ஜினீயரிங் கல்லூரி விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளார். விசாரணைக்காக வரும் 20-ந் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயா கல்லூரி பஞ்சாயத்து
மதுரை மாவட்டம் சிவரக்கோட்டை அருகே மு.க.அழகிரி கல்வி அறக்கட்டளை சார்பில் தயா பொறியியல் கல்லூரி கட்டப்பட்டுள்ளது. பாசன வாய்க்கால்களை ஆக்கிரமித்தும், சேதப்படுத்தியும் கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட விவசாயிகள் நலச்சங்க செயலாளர் ராமலிங்கம் என்பவர் ஆட்சியரிடம் புகார் அளித்து இருந்தார்.
மேலும் அவர், மதுரை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த விவாகரம் தொடர்பாக மு.க.அழகிரி, அவருடைய மனைவி காந்தி அழகிரி, மகன் துரை தயாநிதி ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மதுரை ஆட்சியர் ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தார். அப்போது மு.க.அழகிரி தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில் புதிய சம்மனை மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்துள்ளார். இதில் 20-ந் தேதி தாங்களோ அல்லது அதிகாரம் பெற்றவர்களோ விசாரணைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.