15ம் தேதி முதல் 45 நாட்களுக்கு கடலில் மீன்பிடிக்க தடை
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மறுதினம் முதல் 45 நாட்களுக்கு விசைப்படகுகள், இழுவைப் படகுகள் கடலில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆசிஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஒவ்வொரு ஆண்டும் மீன் இனப்பெருக்கத்திற்காக திருவள்ளூரில் இருந்து குமரி வரையிலான கடலில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்த தடை வரும் 15ம் தேதி முதல் துவங்குகிறது. வரும் மே மாதம் 29ம் தேதி வரை தடை நீடிக்கிறது. இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் ஆழ்கடலில் மீன்பிடிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த தடைகாலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும். தூத்துக்குடியில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாது. இந்த காலகட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் தங்கள் படகுகளை பராமரித்தல், மீன் வலைகள் பின்னுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவர்.