அகஸ்தியர் அருவியில் மதுரை வியாபாரி கொலை!
விகேபுரம்: பாபநாசம் அகஸ்தியர் அருவியில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் மதுரை வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்டார். சுற்றுலா வந்த இடத்தில் இந்த பயங்கரம் நிழந்துள்ளது. இதையொட்டி அம்பையை சேர்ந்த 3 பேரை தேடி வருகின்றனர்.
மதுரை ஆனையூரை சேர்ந்த சேதுராமன் மகன் சசிகுமார் பிளாஸ்டிக் வாங்கி விற்கும் மொத்த வியாபாரி. இவர் கடந்த மாதம் 30ம் தேதி தனது நண்பர்கள் 4 பேருடன் பாபநாசம் வந்தார். அங்கு தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். அன்று காலை அவர்கள் அனைவரும் அகஸ்தியர் அருவியில் குளித்தனர். அப்போது அம்பையை சேர்ந்த சில இளைஞர்களும் குளித்துக் கொண்டிருந்தனர். அருவியில் தண்ணீரை வாரி இறைத்து விளையாடியபோது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
அப்போது அம்பையை சேர்ந்த ஒருவரை சசிகுமார் தாக்கினார். அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்த அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சில மணி நேரம் கழித்து சசிகுமார் அவர் தங்கி இருக்கும் லாட்ஜ் அருகே ரோட்டில் நின்று கொண்டிருந்தபோது அம்பையை சேர்ந்த 3 பேர் வந்தனர். அவர்கள் சசிகுமாரிடம் தகராறு செய்து மதுபாட்டில் மற்றும் கம்பால் தாக்கினர். இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த சசிகுமார் சுயநினைவின்றி கீழே சாய்ந்தார்.
அவருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்தபி்ன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று இறந்தார். இதுகுறித்து விகேபுரம் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் விசாரணை நடத்தி அம்பையை சேர்ந்த 3 பேரை தேடி வருகிறார்.