சர்வதேச எதிர்ப்பை மீறி ஏவிய வடகொரிய ராக்கெட் வெடித்துக் கடலில் விழுந்தது!
பியோங்யன் : சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வடகொரியா நடத்திய செயற்கைக் கோள் ஏவும் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
குவங்மிங்சுங்-3 செயற்கைக் கோள்
குவங்மிங்சுங்-3 எனும் செயற்கைக்கோளை இன்று காலை வட பியோங்யன் மாநிலத்தின் சோல்சான் மாவடத்திலுள்ள தொங்சாங்ரியில் அமைந்துள்ள மேற்குக் கடல் செயற்கைக் கோள் ஏவு மையத்திலிருந்து வட கொரியா ஏவியது.
செயற்கைக் கோள் ஏவப்பட்ட ஒரு நிமிடத்துக்குப் பின்பு, உன்ஹா 3- என்னும் செயற்கைக் கோளை சுமந்து சென்ற வாகனம் பல துண்டுகளாக வெடித்துச் சிதறியது. இதன் மூலம் வட கொரியாவின் செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதனை தென்கொரியா, ஜப்பான், அமெரிக்க ஊடகங்கள் அறிவித்தன. வடகொரியாவும் தமது திட்டம் தோல்வியில் முடிவடைந்ததாகத் தெரிவித்துள்ளது.
வடகொரியான் செயற்கைக் கோள் ஏவும் முயற்சியால் கொரிய தீபகற்பகத்தில் பதட்டம் ஏற்பட்டது. வடகொரியா செயற்கைக் கோளை ஏவிய உடனேயே தென்கொரியாவின் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சக அதிகாரிகளின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்ட்டு விவாதிக்கப்பட்டது.
வடகொரியா தனது அணு ஆயுத ஏவுகணை செயல்பாடுகளால் உலக அளவில் எதிர்ப்பை சந்தித்தது. மேலும், வடகொரிய ஏவுகணை நுட்பம் சர்வதேச விதிகளை மீறுவதாகவும், அதனை தடுக்க வேண்டும் என்றும் உலக நாடுகள் சில கோரி வந்தன.