தலைவர்களின் செயல்பாடுகளை அரசியல் கண்ணோட்டத்தோடு விமர்ச்சிப்பதா? சரத்குமார் எதிர்ப்பு
தலைவர்களின் செயல்பாடுகளை மாறுபட்ட அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்க கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சரத்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் தனது ஆட்சியின் போது, தொழில், கல்வி, வேளாண்மை என அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியவர் கர்ம வீரர் காமராஜர். இந்த சாதனையை எவராலும் மறுக்க முடியாது. மறைக்கவும் முடியாது.
காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டமாக முழுமையாக விரிவுபடுத்தினார். இந்த இருபெரும் தலைவர்களும் மக்களை மட்டுமே நினைத்து இந்த திட்டங்களைச் செய்தனர். தங்கள் சாதனையாக நினைக்கவில்லை.
இந்த இரு தலைவர்களும் ஆற்றிய சாதனைகள் மக்களால் என்றும் மறந்திட முடியாது. எனவே தலைவர்களின் நற்பணிகளை, அவர்கள் புரிந்த சாதனைகளை கட்சி வேறுபாடின்றி நாம் போற்றிட வேண்டும். மாறுபட்ட அரசியல் கண்ணோட்டங்களோடு தலைவர்களின் செயல்பாடுகளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதை நாம் தவிர்க்க வேண்டும்.
இவர்களின் நற்செயல்களை எதிர்க்கட்சியினர் விவாதத்திற்கு எடுத்து கொள்வதை தவிர்த்திட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக சட்டசபையில் முன்னாள் முதல்வர் காமராஜர் பற்றி அமைச்சர் வளர்மதி கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு பதிலடி தரும் வகையில் சரத்குமார் இந்த அறிக்கையை கொடுத்துள்ளார்.
ஆனால், அவரது அறிக்கையில் பாம்பும் சாகாமல், தடியும் உடையாமல் பார்த்துக் கொண்டுளார். அதாவது கூட்டணி கட்சி தலைவியான ஜெயலலிதா -ஆட்சியை விமர்ச்சனம் செய்யாமலும், அதே நேரத்தில் தனது சமுதாய தலைவரான காமராஜரை விட்டுக் கொடுக்க முடியாமலும் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.