வட்டி விகிதங்களை அதிரடியாக குறைத்த ரிசர்வ் வங்கி: இனி, வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும்
அதே நேரத்தில் வங்கிகள் ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்க வேண்டிய தொகையான சி.ஆர்.ஆரை (cash reserve ratio-CRR) உயர்த்தவில்லை.
இதன்மூலம் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியிடமிருந்து குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். மேலும் வங்கிகள் ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்க வேண்டிய தொகையை உயர்த்தாததால், வங்கிகளிடம் அதிகளவில் பணம் புரளும். இந்தப் பணத்தை வங்கிகள் அதிக அளவில் பொது மக்களுக்குக் கடனாக வழங்க முடியும். குறிப்பாக மக்களுக்கு குறைந்த வட்டியில் வீடு, கார் கடன் உள்ளிட்ட கடன்கள் கிடைக்கும்.
வங்கிகள் மக்களுக்குத் தரும் கடனுக்கான வட்டி மிக அதிகமாக இருப்பதால், பொது மக்கள், தொழில் நிறுவனங்கள் வங்கிக் கடன் வாங்குவதை முடிந்தவரை தவிர்த்து வந்தனர். இதனால், நாட்டில் பணப் புழக்கம் குறைந்ததோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் சரிந்து வருகிறது.
இதையடுத்து வங்கிகளுக்கு தரப்படும் தனது கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்தக் கோரிக்கையை மத்திய அரசும் ஏற்றது. ஆனால், அதிகபட்சமாக 25 புள்ளிகள் வரை தான் ரெபோ ரேட்டை ரிசர்வ் வங்கி குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
ஆனால், அதிரடியாக 50 புள்ளிகள் வரை குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வட்டிக் குறைப்பாகும்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் 8 முதல் 9 சதவீதமாக இருந்த நாட்டின் வளர்ச்சி, இப்போது 6 சதவீதமாக சரிந்துள்ளது. இதற்கு அதிகமான வட்டி விகிதங்களே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இதையடுத்தே இந்த வட்டி விகிதக் குறைப்பை மத்திய அரசு அமலாக்கியுள்ளது.
ஆனால், இந்த வட்டிக் குறைப்பால் பணவீக்கம் அதிகரிக்கும் ஆபத்தும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 3 ஆண்டுகளில் 13 முறை வட்டி விகிதத்தை உயர்த்தி ரிசர்வ் வங்கி இப்போது தான் முதன்முறையாக அதைக் குறைத்துள்ளது.