மார்க்சிஸ்ட் கட்சியினருடன் பேசக்கூட கூடாது: திரிணாமுல் தொண்டர்களுக்கு மமதா அதிரடி உத்தரவு
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் பிரதான எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்களுடன் அல்லது தலைவர்களுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் எந்த ஒரு தொடர்பையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அம்மாநில முதல்வரும் கட்சித் தலைவருமான மமதா பானர்ஜி அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தம்மைப் பற்றிய கேலிச்சித்திரத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டதற்காக பேராசிரியர் உட்பட இருவரை சிறையில் அண்மையில் அடைத்தார் மமதா பானர்ஜி. அதற்கு முன்னதாக ரயில் கட்டணத்தை உயர்த்தியதற்காக தினேஷ் திரிவேதியின் அமைச்சர் பதவியையே பறித்தார் மமதா.
இந்நிலையில் கட்சியினருக்கு செம அதிரடியாக ஒரு உத்தரவைப் போட்டுள்ளார் மமதாபானர்ஜி.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சமூக ரீதியாக புறக்கணிக்க வேண்டும் என்பதற்காக அக்கட்சித் தொண்டர்களையோ தலைவர்களையோ எந்த இடத்தில் பார்த்தாலும் அது டீக்கடையாக இருந்தாலும் சரி எழவு வீடாக இருந்தாலும் சரி பேசக்கூடாது என்று கூறியிருக்கிறார்.
இன்னும் ஒருபடிமேலே போய் மார்க்சிஸ் கட்சியினருடன் எந்தவிதமான திருமண உறவும்கூட வைத்துக் கொள்ளக்கூடாது என்று அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார் மமதா.
இதனை மமதாவின் உணவுத்துறை அமைச்சரான ஜோதிபிரியா மல்லிக்கும் உறுதி செய்துள்ளார்.
கொஞ்சகாலம் ஆசிரியராகப் பணிபுரிந்த மமதா பானர்ஜி தம் தொண்டர்களை பள்ளிக்கூட மாணவர்களைப் போலவே நடத்துகிறார்..