விஜயகாந்த்திடம் அடி வாங்கிய எம்.எல்.ஏவிடம் பேட்டி எடுத்து காசு கேட்ட 'டுபாக்கூர்' நிருபருக்கு சிறை!
தர்மபுரி சட்டசபைத் தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டவர் பாஸ்கர். தேர்தல் பிரசாரத்தின்போது தர்மபுரியில் வேனில் நின்றபடி பிரசாரம் செய்த விஜயகாந்த், பாஸ்கர் என்ற பெயருக்குப் பதில் பாண்டி என்று கூறி விட்டார். இதனால் கூட்டத்தினர் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. அப்போது பாஸ்கர் உள்ளுக்குள்ளிருந்து மெதுவாக தலையை மேலே நீட்டி அண்ணே, என் பெயர் பாஸ்கர் என்று கூறவே, அதைக் கேட்டு கோபமடைந்த விஜயகாந்த், வேனுக்குள் இருந்த பாஸ்கரை சரமாரியாக அடித்து அது லைவாக ஊர் பூராவும் ஒளிபரப்பாகி விட்டது.
இந்த சம்பவத்தை வைத்து திமுகவுக்காக பிரசாரம் செய்த வடிவேலு போகிற இடங்களிலெல்லாம் கிண்டலடித்து கலாய்த்தார். இந்த சம்பவத்தை சமீபத்தில் கூட சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவும் மறைமுகமாக குறிப்பிட்டு கிண்டலடித்திருந்தார். அந்த பாஸ்கர் தற்போது தர்மபுரி எம்.எல்.ஏவாக உள்ளார்.
இவரிடம் சேகர் என்ற வயதான ஒருவர், அதாவது அவருக்கு வயது 63, வந்துள்ளார். தன்னை இந்தியா டுடே இதழின் செய்தியாளர் என்று கூறிக் கொண்டார். பின்னர் உங்களிடம் ஒரு சிறப்புப் பேட்டி எடுத்து போடப் போகிறோம் என்று கூறியுள்ளார்.
இந்தியா டுடேவில் எனது பேட்டியா என்று குஷியாகிப் போன பாஸ்கர் கேட்ட கேள்விக்கெல்லாம் கலக்கலாக பதிலளித்து முடித்தார். பேட்டியை முடித்துக் கொண்டு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன்பு, சேகர், பாஸ்கரிடம், ஒரு பத்தாயிரம் ரூபாய் இருந்தால் கொடுங்கள், அப்பத்தான் பேட்டி வெளியாகும் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு பாஸ்கருக்கு சந்தேகம் வந்தது.
உடனே தர்மபுரி டவுன் காவல் நிலையத்திற்குப் போனைப் போட்டு போலீஸாரை வரவழைத்தார். ஓடி வந்த போலீஸார் சேகரைப் பிடித்து காவல் நிலையத்திற்குக் கூட்டிக் கொண்டு போய் விசாரித்தனர். அப்போதுதான் அவர் டுபாக்கூர் செய்தியாளர் என்று தெரிய வந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்து சிறையில் போட்டு விட்டனர்.
தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த தர்மபுரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் சேகருக்கு 9 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது.