சவூதியில் இறந்த தமிழக பெண்ணின் உடலை மீட்டுத் தர கணவர் கோரிக்கை
திருச்சி: கும்பகோணத்தைச் சேர்ந்த பெண் சவூதியில் மர்மான முறையில் மரணம் அடைந்தது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது கணவர் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் திருநரையூர் எல்லைக்கல் தெருவைச் சேர்ந்த செல்வராஜ். அவரது மனைவி சுதா ரியாத்தில் வீட்டு வேலைக்கு சென்ற நிலையில் மர்மமான முறையில் இறந்துவிட்டார்.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் செல்வராஜ் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
எனது மனைவி சுதாவை திருச்சி ஏஜெண்ட் மூலம் சவூதி அரேபியாவில் உள்ள ரியாத்திற்கு வீட்டு வேலைக்காக கடந்த மார்ச் 2 ம் தேதி அனுப்பி வைத்தேன். அதே மாதம் 16-ந் தேதி என் மனைவி போனில் பேசியபோது என்னை கொடுமைபடுத்துகிறார்கள் என்றார். தாம் உடனே திரும்பி வர நடவடிக்கை எடுங்கள் என்று கேட்டு அவர் அழுதார்.
இந்நிலையில் 19-ந் தேதி அங்கிருந்து கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் போனில் தொடர்பு கொண்டு என் மனைவி இறந்து விட்டதாகக் கூறினார்.
உடனே திருச்சியில் உள்ள ஏஜென்ட்டை தொடர்பு கொண்டு கேட்ட போது, அவரும் என் மனைவி இறந்ததை உறுதிபடுத்தினார். என் மனைவி நல்ல உடல் நலத்துடன் இருந்தார். அவரை சவூதி முதலாளி ஹமீத் பகத்தான் துன்புறுத்தி கொலை செய்துள்ளார்.
மேலும் எனது மனைவி இறந்தது குறித்து சவூதி போலீஸ் மற்றும் இந்திய தூதரகத்துக்கும் தகவல் தெரிவிக்காமல் உள்ளனர். இது குறித்து தஞ்சை ஆட்சியரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு கொடுத்தேன். ஆனால் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லலை.
எனவே எனது மனைவியின் உடலை மீட்டுத் தருவதுடன், அவரது கொலைக்கு காரணமாணவர்கள் மீதும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.