திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
குலசேகரம்: கோடையின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திற்பரப்பு அருவிக்கு வந்து குளித்து மகிழ்கின்றனர்.
வற்றாத கோதையாறு திற்பரப்பில் அருவியாக விழுவதால் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் அருவி என்ற சிறப்பு திற்பரப்பு அருவிக்கு உண்டு. இதனால் சீசன் காலம் என்று இல்லாமல் எப்பொழுதும் தண்ணீர் விழுவதால் நாட்டின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இங்கு இன்ப சுற்றுலா வருகி்ன்றனர்.
பயணிகளை கவரும் வகையில் பூந்தோட்டம், உல்லாச படகு சவாரிக்கு படகுத்துறை என சிறப்பு அம்சங்கள் உள்ளன. கடந்த ஒரு மாதமாக அருவி பகுதியில் வெயில் வாட்டி எடுத்தது. மலைகளில் உள்ள நீரோடைகளில் நீர் ஊற்றுகள் வறண்டு காணப்பட்டது. இதனால் கோதையாற்றில் நீர் வரத்து குறைவாக இருந்தது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் குறைந்த அளவே விழுந்ததுது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மலையோர பகுதிகளிலும் அதையொட்டிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கோதையாற்றில் தண்ணீர் அதிக அளவு வரத் தொடங்கியுள்ளதையடுத்து அருவியிலும் தண்ணீர் அதிக அளவு கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அருவிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து மகிழ்கின்றனர்.