பிரான்ஸ் அதிபரைத் தேர்ந்தெடுக்க புதுவை, சென்னையில் ஓட்டு போட்ட மக்கள்!
பிரான்ஸ் அதிபர் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டமாக நாடு முழுவதும் தேர்தல் நடத்தப்படும். இந்த முதல் கட்ட வாக்குப் பதிவுகள் எண்ணப்படும். இதில் யாருமே 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெறாவிட்டால் மீண்டும் 2வது கட்டமாக தேர்தல் நடத்தப்படும். முதல் கட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களே அதிலும் போட்டியிடுவர். இத்தேர்தல் மே 6ம் தேதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதைய தேர்தலில் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி 2வது முறையாக களம் கண்டுள்ளார். இவருக்குக் கடும் போட்டியைக் கொடுப்பவர் சோசலிச கட்சியைச் சேர்ந்த பிரான்காய்ஸ் ஹோலன்டே மற்றும் மரின் லி பென், ஜீன் லுக் மெலன்சான், பிரான்காய்ஸ், பெய்ரூ ஆகியோர். மொத்தம் 10 பேர் களத்தில் உள்ளனர்.
இத்தேர்தலில் மொத்தம் 4 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். இன்று காலை 8 மணிக்கு அந்நாடு முழுவதும் முதல்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது.
புதுவை-சென்னையிலும் ஓட்டு
இந்தியாவிலும் சுமார் 5 ஆயிரம் பேர் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் புதுச்சேரியில்தான் உள்ளனர். மற்றவர்கள் சென்னை, கேரளா, அந்தமான் ஆகிய பகுதிகளில் உள்ளனர்.
இவர்களுக்காக 6 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நான்கு சாவடிகள் புதுச்சேரியிலும், சென்னை, காரைக்காலில் தலா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளன. அங்கும் இன்று காலை வாக்குப் பதிவு நடைபெற்றது.
சென்னையில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டு வாக்குப் பதிவு நடைபெற்றது.