நாளை அட்சய திருதியை: அதிகாலை முதல் நள்ளிரவு வரை நகைக்கடைகள் திறப்பு
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் ஆண்டு முழுவதும் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. அதனால் தங்கத்தின் விலை என்ன தான் விண்ணைத் தொடும் அளவில் இருந்தாலும் அட்சய திருதியை அன்று நகைக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழியும். இந்நிலையில் நாளை அட்சய திருதியை வருகிறது.
இதை முன்னிட்டு ஏராளமான நகைக்கடைகள் மக்களைக் கவரும் வகையில் சலுகைகள் அறிவித்துள்ளன. செய்கூலி இல்லை, கற்களுக்கு விலை இல்லை, நகை வாங்கினால் தங்க நாணயம் இலவசம் என்று விளம்பரம் செய்து வருகின்றன.
இதனால் எந்த கடையில் நகை வாங்கினால் அதிக லாபம் என்று கணக்கு போட்டு அநத கடைகளில் போய் நகை வாங்க மக்கள் திட்டமிட்டு வருகின்றனர். இதற்கிடையே நகை வாங்க முன்பதிவு செய்யும் வசதியையும் சில கடைகள் அறிமுகப்படுத்தியுள்ளன.
இதையடுத்து முன்பதிவு செய்ய நகைக்கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர் என்றும், தங்கத்தின் விலை அதிகரித்திருந்தாலும் இந்த ஆண்டு விற்பனை அமோகமாக இருக்கும் என்றும் நகைக்கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாளை அதிகாலை முதலே மக்கள் நகை வாங்க வருவார்கள் என்பதால் தி. நகர், புரசைவாக்கம் உள்பட சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள அனைத்து நகைக்கடைகளும் நாளை காலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு வரை விற்பனை நடைபெறும். மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.