காஸ்மியை நீக்கியதால் பின்னடைவோ பிளவோ இல்லை: அன்னா ஹசாரே
டெல்லி: தங்கள் குழுவில் இருந்து முஸ்லிம் தலைவரான காஸ்மி நீக்கப்பட்டதால் தங்களது ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு எந்தப் பின்னடைவும் ஏற்படவில்லை என்று சமூக சேவகர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் அன்னா ஹசாரே இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எங்களிடையே பிளவு எதுவும் கிடையாது. ஊடகங்கள்தான் பிளவை பற்றி கேட்கிறீர்கள்? எங்கள் குழுவைச் சேர்ந்த காஸ்மி கூட்ட நடவடிக்கையை ரகசியமாக படம் பிடித்த விவகாரத்தில் அவராகவே வெளியேறிச் சென்றுவிட்டார். இதில் பிளவு எங்கே இருக்கிறது.
கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் அதை சரிசெய்வோம். அதற்காக நாங்கள் சரிந்து போய்விடமாட்டோம்.
ராம்தேவ் எங்களது போராட்டத்தில் பங்கேற்பதால் கருத்து வேறுபாடு இருப்பதாக சொல்லப்படுவது உண்மை அல்ல. எங்களது கோரிக்கைகளுக்கு ஏற்கெனவே அவர் ஆதரவு அளித்து வருபவர்தான்.
ஊழலுக்கு எதிராக தேவைப்படும் இடங்களில் நாங்கள் இணைந்தே போராடுவோம். அதற்காக நாடு முழுவதும் ஒரே நேரத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளமாட்டேன். எங்கள் இருவரது சிந்தனையும் ஊழலின் பிடியில் உள்ள நாட்டை மீட்க வேண்டும் என்பதுதான் என்றார் அவர்.