பிக்ரம்சிங்கை புதிய ராணுவ தளபதியாக நியமிப்பதை எதிர்க்கும் பொதுநலன் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
டெல்லி: நாட்டின் புதிய ராணுவ தளபதியாக பிக்ரம்சிங்கை நியமிக்க எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.
காங்கோ நாட்டிலும் காஷ்மீர் மாநிலத்திலும் நடத்தப்பட்ட போலி என்கவுன்ட்டர்களில் பிக்ரம்சிங் தொடர்பிருப்பதால் அவரை புதிய ராணுவ தளபதியாக நியமிக்கக் கூடாது என்று ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் குழு பொதுநலன் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி, ஓய்வு பெற்ற கடற்படை தளபதி அட்மிரல் லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய குழு இம்மனுவைத் தாக்கல் செய்திருந்தது.
இம்மனுவை இன்று காலை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் லோதா மற்றும் கோகலே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிற்பகல் 2 மணிக்குள் பிக்ரசிம்சிங்கின் பணிப்பதிவேட்டைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து மத்திய அரசும் பணிப்பதிவேட்டைத் தாக்கல் செய்தது.
பின்னர் விசாரணை நடத்திய நீதிபதிகள், பிக்ரம்சிங் நியமனமானது அரசின் முடிவு என்பதால் இதில் தாங்கள் தலையிட முடியாது என்று கூறி பொதுநலன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.