கர்நாடகத்தில் "லிங்காயத்துகள்" வாக்குகளைக் கவர சோனியா அதிரடி திட்டம்-கவலையில் பாஜக!
கர்நாடக மாநிலத்தில் ஒக்கலிகா கவுடா மற்றும் லிங்காயத்துகள் சமூகத்தினரே பெரும்பான்மையினராவர். இவர்களில் லிங்காயத்துக்கள்தான் ஆட்சி, அதிகாரத்தில் கை ஓங்கிய நிலையில் இருப்பவர்கள். லிங்காயத்துகள் 21 சதவீதத்தினர் உள்ளனர். இந்த இரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் முதலமைச்சர் உட்பட முக்கியப் பொறுப்புகளை மாறி மாறி வகித்து வருகின்றனர்.
கர்நாடக முதல்வராக லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த எதியூரப்பா இருந்து வந்தார். சுரங்க முறைகேட்டில் சிக்கிய அவர் முதல் பதவியை இழக்க கவுடா சமூகத்தைச் சேர்ந்த சதானந்தா கவுடா முதல்வரானார்.
ஆனாலும் சிறை மீண்ட எதியூரப்பா தமக்கு முதல்வர் பதவியை மீண்டும் வழங்க வலியுறுத்தி வருகிறார். ஆனால் சதனாந்தா கவுடாவோ அப்பதவியை விட்டுத்தர முடியாது என்று கூறிவருகிறார்.
கர்நாடக பாஜகவுக்கு லிங்காயத்துகள் வாக்குகளே பலமாக இருந்தது. இப்போது எதியூரப்பாவை ஒதுக்கி வைத்திருப்பதன் மூலம் லிங்காயத்துகள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஏப்ரல் 28-ந் தேதி கர்நாடக மாநிலத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பயணம் மேற்கொள்கிறார். அதிருப்தியில் இருக்கும் லிங்காயத்துகளின் மனதைக் கவரும் வகையில் தும்கூர் மாவட்டத்தில் உள்ல லிங்காயத்து சமூகத்தினரின் மடமான சித்தகங்கா மடத்துக்கு நேரில் சென்று மடாதிபதி சிவகுமார சுவாமியின் 105வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு ஆசீர்வாதம் பெறத் திட்டமிட்டுள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சி மாநிலப் பொதுச்செயலர் மதுசூன் மிஸ்த்ரி மற்றும் காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா ஆகியோர் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் தரப்பில் கூறுகையில், எதியூரப்பாவுக்கு முன்பு இருந்தே லிங்காயத்து சமூகத்தினர் காங்கிரஸுக்கு ஆதரவாகவே இருந்து வருகின்றனர். லிங்காயத்துக்களை கவர வேண்டும் என்பது எங்களுக்கு அவசியமில்லை. அவர்கள் எப்போதுமே எங்கள் பக்கம்தான் என்று கூறுகின்றனர்.
அதேசமயம், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் லிங்காயத்து மடத்து வருகைக்குப் பிறகாவது தமது பலத்தை பாரதிய ஜனதா கட்சி மேலிடம் புரிந்து கொள்ளும் என்பது எதியூரப்பா ஆதரவாளர்களின் எண்ணமாக இருக்கிறது.
ஒருவேளை எதியூரப்பாவை மீண்டும் முதல்வராக்கிவிட்டால் வருத்தப்படும் கவுடா சமூகத்தின் வாக்குகளைக் கவருவதற்காக அந்த சமூகத்தைச் சேர்ந்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை களமிறக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டிருக்கிறது. இப்படி இருபக்கமும் வரிந்து கட்டிக் கொண்டு காங்கிரஸ் தேவுடு காத்து வருவதால் பாஜகவுக்கு இரட்டைத் தலைவலியாகியுள்ளது.