ஆட்சியர் அலெக்ஸை மீட்க அனைத்து உதவிகளையும் செய்வோம்: சத்தீஸ்கர் அரசுக்கு மத்திய அரசு உறுதி
டெல்லி: சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால்மேனனை மீட்க மேற்கொண்டு வரும் மீட்பு நடவடிக்கைகளுக்கு அனைத்து உதவியும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக உள்துறைச் செயலாளர் ஆர்.கே.சிங் உறுதியளித்துள்ளார்.
அலெக்ஸ்பால்மேனனை மீட்பதற்கான நடவடிக்கைகள் குறித்து சத்தீஸ்கர் மாநில அரசை மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் ஏற்கனவே கேட்டறிந்தனர். தமிழகத்தை சேர்ந்த மற்ற மத்திய அமைச்சர்களும் இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே. சிங் இன்று காலை சத்தீஸ்கர் மாநில அரசு உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். அப்போது அவர், சத்தீஸ்கர் மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கத்தயார் என்றார்.
மாவோயிஸ்டுகளின் நிபந்தனையை நிறைவேற்றுவது தொடர்பாக மாநில அரசுடன் இன்று மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் விவாதித்ததாக தெரிகிறது.