நல்ல உள்ளம் படைத்தவனை கடத்துவதற்கு எப்படித்தான் மனம் வந்ததோ?-கலெக்டரின் தாத்தா வேதனை
அலெக்ஸ் பால் மேனனின் பூர்வீகம் நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஆகும். கலெக்டர் கடத்தலால் இந்தக் கிராமமே அதிர்ச்சியடைந்துள்ளது. தேவாலயத்தில் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர் ஊர் மக்கள்.
அலெக்ஸின் தாத்தா ராஜாமணி இங்குதான் வசித்து வருகிறார். அவர் தனது பேரன் குறித்துக் கூறுகையில், ஐஏஎஸ் அதிகாரியானால் தான், மக்களுக்கு சேவையை செய்ய அனைத்து அதிகாரங்களும் கிடைக்கும் என்று சிறுவயதில் மூச்சுக்கு மூச்சு சொல்வான். சொன்னபடி அதிகாரி ஆனான். அப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்தவனை கடத்துவதற்கு தீவிரவாதிகளுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ? அவனது நல்ல மனதுக்கு கூடிய சீக்கிரமே பத்திரமாக திரும்பி வந்து எங்களை எல்லாம் பார்ப்பான். அந்த நம்பிக்கை எனக்கு 100 சதவீதம் உள்ளது என்றார்.
அலெக்ஸின் சித்தியான ஆசிரியை கண்ணகி கூறுகையில்,
அலெக்ஸ் சிறு வயதில் இருந்தே படிப்பில் சுட்டிப் பையன். ஏழை, எளிய மக்களுக்கு அவனாகவே விரும்பிச் சென்று உதவி செய்வான். அவனை ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக்கி அழகு பார்க்க வேண்டும் என்று அவனுடைய அம்மா ஆசைப்பட்டார். தாயின் கனவை நனவாக்க வேண்டும் என்று லட்சியம் வகுத்து படித்தான். ஐஏஎஸ் தேர்விலும் வெற்றி பெற்றான்.
வாழ்க்கையில் நேர்மையாக இருக்க வேண்டும் என்றும், கடவுள் கொடுத்த கடமையை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் என்னிடம் அடிக்கடி கூறுவான். என்னுடைய மகனைப் போன்று தான் அவனை நினைப்பேன். அவன் உயர் பதவி வகித்து எங்களுக்கு எல்லாம் பெருமை தேடித் தந்தான்.
இப்போது மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் அவன் கடத்தப்பட்டு, இன்னலுக்கு ஆளாகி இருப்பது ஒட்டுமொத்த குடும்பத்தினரையும், ஊர் மக்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அலெக்ஸ் பத்திரமாக மீட்கப்பட வேண்டும். தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து மத்திய அரசிடமும், சட்டிஸ்கர் மாநில அரசிடமும் பேசி அலெக்சை மீட்டுத்தர வேண்டும் என்று கூறினார்.