பாசி நிதிநிறுவன மோசடி: போலீஸ் ஐ.ஜி. பிரமோத்குமாருக்கு சி.பி.ஐ. வலை
சென்னை: திருப்பூர் பாசி நிதிநிறுவன மோசடி வழக்கில் ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி.பிரமோத்குமாரை கைது செய்ய சி.பி.ஐ.போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் பாசி நிதிநிறுவனம் பொதுமக்கள் பணம் ரூ500 கோடியை மோசடி செய்தது. இந்த வழகில் குற்றவாளிகளைக் காப்பாற்ற அப்போதைய மேற்கு மண்டல ஐ.ஜியாக இருந்த பிரமோத்குமார் தீவிரம் காட்டியதாக கூறப்பட்டது. இந்த மோசடி வழக்கை சி.பி.ஐ. தற்போது விசாரித்து வருகிறது. திருப்பூர் பாசி மோசடி வழக்கில் ஏற்கனவே துணை போலீஸ் சூப்பிரண்டு ஒருவர், 2 இன்ஸ்பெக்டர்கள் கைது செய்யப்பட்டு, சஸ்பெண்டு ஆகி இருக்கின்றனர். நிதிநிறுவனத்தின் இயக்குனர்களும் கைதாகி உள்ளனர். இந்நிலையில் சென்னை ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி.பிரமோத்குமார் மீதும் சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதனிடையே முன்ஜாமீன் கேட்டு பிரமோத்குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவும் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இந்த வழக்கில் தப்பிக்க பிரமோத்குமார் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்த நிலையில் உச்சநீதிமன்றத்தை அவர் நாடக் கூடும் எனத் தெரிகிறது.
அதற்கு முன்பாகவே பிரமோத்குமாரை கைது செய்ய சி.பி.ஐ. போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர். சென்னையைவிட்டு தப்பிவிட்ட அவர் சரணடைய வேண்டிய நிலையில் உள்ளார். இதனால் அவர் எப்போதுவேண்டுமானாலும் சஸ்பெண்ட் செய்யப்படக் கூடும் எனக் கூறப்படுகிறது.