சிக்னல் கோளாறால் 2 நாட்களாக சென்னையில் மின்சார ரயில் சேவை பாதிப்பு
சென்னை: சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் மின்சார ரயில் போக்குவரத்து நேற்று 2-வது நாளாக பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான வழித்தடங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த வழித்தடத்தில் சனிக்கிழமையன்று சிக்னல் கோளாறால் மின்சார ரயில்.பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில் வழித்தடங்களில் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால் எக்ஸ்பிரஸ் ரயில்சேவையும் பாதிப்புக்குள்ளானது.
இந்த நிலையில் கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே மின்சார ரயிலுக்குரிய சிக்னலில் கோளாறு ஏற்பட்டது. இதனால் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர். வேறுவழியின்றி மீண்டும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் வழித்தடத்தில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. பிற்பகல் வரை இதே நிலைமை நீடித்தது.
சிக்னல்களை ரயில்வே நிர்வகாம் சோதனை செய்ததால்தான் இந்த போக்குவரத்து பாதிப்பு என்று கூறப்பட்டது. பிற்பகல் 2 மணிக்குப் பிறகே நிலைமை சீராகி மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.