கடத்தப்பட்ட மேனனின் தந்தையுடன் வைகோ சந்திப்பு: பத்திரமாக மீட்க பிரதமருக்கு கடிதம்
இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சத்தீஸ்கர் மாநிலத்தின், சுக்மா மாவட்ட ஆட்சித் தலைவர் அலெக்ஸ் பால் மேனன், ஏப்ரல் 21ம் நாள், மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட செய்தி அறிந்து, அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மேனன், தன்னலமற்ற மக்கள் சேவைக்காகத் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர்.
அவர் கடத்தப்பட்ட செய்தி, இந்தியா முழுமையும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பி உள்ளது; தமிழக மக்கள், அவரது பாதுகாப்பு குறித்துப் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
மேனனின் அன்பு மனைவி கருவுற்று உள்ள நிலையில், ஆற்றுப்படுத்த முடியாத அதிர்ச்சியில், நிலைகுலைந்து உள்ளார். மேனனின் தந்தையும், சகோதரியும், குடும்பத்தினரும் கண்ணீரில் ஆழ்ந்துள்ளனர்.
இந்திய அரசும், சத்தீஸ்கர் மாநில அரசும், மேனனை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதை அறிவேன். அவர் பாதுகாப்பாகத் திரும்பி வருவதற்கு ஆவன செய்து உதவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன் என்று வைகோ தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக வைகோவும் அவரது மனைவியும் சென்னை கொளத்தூரில் உள்ள மேனனின் மாமனார் இல்லத்துக்கு, இன்று காலை சென்றனர்.
அங்கு தங்கியுள்ள மேனின் தந்தை வரதாஸ், மேனனின் மனைவி ஆஷாவின் தந்தை வேணுகோபால் மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.