வந்து போன உறவு பாதியில் அந்து போனதால் 3 குழந்தைகளுடன் விஷம் குடித்த பெண்!
சென்னை: கணவரைப் பிரிந்த நிலையில், ஹோட்டலில் வேலை பார்த்தபோது அங்கு சாப்பிட வந்த நபருடன் ஏற்பட்ட உறவு, பாதியிலேயே பிளந்து போனதால், மனம் உடைந்த பெண் தனது 3 குழந்தைகளுடன் விஷம் குடித்து விட்டார்.
முறை தவறிய காதல், திருட்டுத்தனமான காதல் என்று பலவிதமான காதல்களில் சிக்கி ஆண்களும், பெண்களும் உயிரை மாய்ப்பதும், உயிரை எடுப்பதும் தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில், சென்னை அருகே ஒரு பெண் தனது முறை தவறிய காதலில் ஏற்பட்ட பிரிவால் மனம் உடைந்து தனது மூன்று குழந்தைகளுடன் விஷம் குடித்து விட்டார்.
சென்னை திருமுல்லைவாயலை அடுத்த அயப்பாக்கம் அபர்ணா நகரைச் சேர்ந்தவர் ஜீவா. வயது 28 ஆகிறது. அவருக்கு கோமதி, ஷாலினி, திலீப் குமார் என மூன்று குழந்தைகள். கணவர் இருந்தார். ஆனால் தற்போது பிரிந்து போய் விட்டார்.
இதனால் குடும்பத்தைக் கவனிக்க அருகில் உள்ள ஹோட்டலில் வேலை பார்த்து வந்தார் ஜீவா. அப்போது அங்கு அடிக்கடி சாப்பிட வந்த ராஜேஷ் என்ற ஒருவர் ஜீவா மீது கண் வைத்தார். பழக்கம் ஏற்பட்டது, நட்பு உருவாகி அது உறவில் முடிந்தது. இருவரும் அடிக்கடி சந்தித்து உறவை வளர்த்தனர். ஆனால் ராஜேஷின் வீட்டுக்கு இது தெரிய வந்தது. ராஜேஷின் மனைவி கொதித்தெழுந்தார்.
அதுவரை இரு குதிரையில் சவாரி செய்து வந்த ராஜேஷ், மனைவியின் கொந்தளிப்புக்கு முன்பு பயந்து போய், ஜீவாவை கைவிட முடிவு செய்தார். இதை அறிந்து ஜீவா மனம் உடைந்தார். இது நியாயமா என்று ராஜேஷிடம் நீதி கேட்டார். ஆனால் அவரோ, எனக்கு மனைவிதான் முக்கியம், என்னை விட்டு விடு என்று கூறி விட்டார்.
இதையடுத்து வேதனையுற்ற ஜீவா, ஜீவனை முடித்துக் கொள்ள தீர்மானித்தார். நேற்று இரவு தனது மூ்ன்று குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்தார். தானும் குடித்தார்.
மயங்கி விழுந்த நான்கு பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைக்குப் பின்னர் நால்வரும் உயிர் பிழைத்தனர்.
தற்கொலை முடிவை எடுப்பதற்கு முன்பு ஜீவா ஒரு கடிதத்தை எழுதி அதை மகன் திலீப்குமார் சட்டைப் பையில் வைத்திருந்தார். அதில், என்னுடன் தொடர்பு வைத்திருந்த ராஜேஷ் என்னை விட்டு விலகி போகிறார். இதனால் நானும் குழந்தைகளும் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று எழுதப்பட்டு இருந்தது.
போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேஷைக் கைது செய்வார்களா என்பது தெரியவில்லை.