புதுக்கோட்டையில் என்னத்தை செய்ய?... விவாதிக்க கூடுகிறது சிபிஐ மாநிலக் குழு!
புதுக்கோட்டை சட்டசபைத் தொகுதி உறுப்பினராக இருந்து வந்தவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துக்குமரன். இவர் ஏப்ரல் 1ம் தேதி நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அங்கு ஜூன் 12ம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைத் தேர்தலிலும் தாங்களே போட்டியிட அதிமுக ஆதரவு தரும் என்று நம்பியிருந்த நிலையில் அங்கு கார்த்திக் தொண்டைமான் போட்டியிடுவார் என்று அதிமுக அறிவித்து விட்டது. இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவிடம் பேசுவதற்கு அப்பாயின்ட்மென்ட் கேட்டிருந்த நிலையில் வேட்பாளரை அவர் அறிவித்ததால் கையும் ஓடாமல் காலும் ஓடாமல் அவதிக்குள்ளாகியுள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
இதையடுத்து தனது மாநிலக் குழுக் கூட்டத்தை சென்னையில் அக்கட்சி கூட்டியுள்ளது. இக்கூட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா, போட்டியிட்டால் யாரை நிறுத்துவது, யாரிடம் ஆதரவு கோருவது என்பது உள்ளிட்டவை குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் ஆண்டிப்பட்டியில் நடந்த கட்சிப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறுகையில், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியை அகற்ற வேண்டும். அப்போது தான் நாட்டை பிடித்த பிணி விலகும் என்று பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், நமது நாட்டில் அதிக அளவு உணவு உற்பத்தி இருந்தும், அவற்றை பாதுகாக்க போதுமான வசதி வாய்ப்புகள் இல்லை. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் டன் கணக்கில் உணவு உற்பத்தி செய்தும், பல பகுதிகளில் மக்கள் பட்டினி கிடக்கும் அவலநிலையே இனறும் நாட்டில் நிலவி வருகின்றது.
நதிகளை இணைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தியும், அதை நடைமுறைப்படுத்த அரசியல் கட்சிகள் அக்கறை காட்டவில்லை. நாட்டில் எத்தனையோ மக்கள் குடியிருக்க வீடு இன்றி நடுத் தெருவில் தூங்கும் அவலம் உள்ளது. இதை சரிமுடியாத மத்திய அரசு ராக்கெட் விடுவாதாக பீற்றிக் கொள்கின்றது.
வெளிநாட்டு வங்கிகளில் பல ஆயிரம் கோடி கருப்பு பணம் பதுக்கப்பட்டுள்ளது. அவைளை மீட்டாலே உலகிலேயே இந்தியா செல்வ செழிப்பான பூமியாக மாறிவிடும். மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியை அகற்ற வேண்டும். அப்போது தான் நாட்டை பிடித்த பிணி விலகும் என்றார்.