வீடு இடித்த வழக்கு: வீடியோ கான்பரன்சிங் மூலம் நடராஜனின் காவல் 7ம் தேதி வரை நீட்டிப்பு
தஞ்சாவூர்: பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் இருக்கும் நடராஜனின் காவல் வரும் மே மாதம் 7ம் தேதி வரை நீட்டிக்கப்ப்டடுள்ளது.
தஞ்சை தமிழ் நகரைச் சேர்ந்தவர் சகுந்தலா. அவர் சசிகலாவின் கணவர் நடராஜன் மீது தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீசில் புகார் கொடுத்தார். அதில், நடராஜன், சிவகுமார் உள்பட 5 பேர் சேர்ந்து தனது வீட்டை இடித்துத் தள்ளியதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் நடராஜன் மற்றும் சிவகுமார் ஆகியோரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி தஞ்சை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடராஜன் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இந்த வழக்குகள் தொடர்பாக தன்னை அடிக்கடி நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதால் தனது உடல்நலம் பாதிக்கப்படுவதாக நடராஜன் போலீஸ் அதிகாரிகளிடம் எழுத்து மூலம் தெரிவித்தார். இந்நிலையில் வீட்டை இடித்து தள்ளிய வழக்கில் நடராஜனை நேற்று தஞ்சை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் இன்று சிறையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தப்பட்டது.
நீதிபதி கார்த்திகா வீடியோ கான்பரன்சிங் மூலம் நடராஜனிடம் விசாரணை நடத்தி அவரது காவலை வரும் மே மாதம் 7ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.