சென்னையிலும் தொடங்கியது ஜாதிவாரி கணக்கெடுப்பு
சென்னை: தமிழகத்தில் கடந்த வாரம் ஜாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடங்கிய நிலையில் சென்னை மாநகராட்சிட்குட்பட்ட பகுதிகளில் இன்று தொடங்கியது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூறுகையில்,
ஜாதிவாரி கணக்கெடுப்பு பணிக்காக மாநகராட்சி ஆணையர், இணை ஆணையர்கள், மத்திய வட்டார துணை ஆய்வாளர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்பட 7,152 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். 64 பொறுப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. சமூக, பொருளாதார மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பின்போது பொதுமக்கள் தெரிவிக்கும் தகவல்கள் அனைத்தும் உடனுக்குடன் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும்.
பொதுமக்கள் தெரிவிக்கும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். எனவே சரியான தகவல்களை தயக்கமின்றி கணக்கெடுக்க வரும் ஊழியர்களிடம் தெரிவியுங்கள். இதன் மூலம் எதிர்காலத்தில் பயனுள்ள பல்வேறு திட்டங்களை அரசு நிறைவேற்ற வாய்ப்பாக அமையும் என்றார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 14.91 லட்சம் வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்கள் தொகை 65 லட்சம் பேர் ஆகும். மொத்தம் 7152 ஊழியர்கள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டிலேயே முதல் முறையாக தற்போதுதான் ஜாதி வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.