ஆருஷி கொலை வழக்கு: தாய் நுபுர் தல்வாரின் ஜாமீன் மனு தள்ளுபடி
கடந்த 2008ம் ஆண்டு ஆருஷி தல்வார் மற்றும் அவரது வீட்டில் வேலை செய்து வந்த ஹேம்ராஜ் என்னும் வாலிபர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய சாட்சியங்களை அழித்ததாக ராஜேஷ் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த வழக்கில் நுபுர் தல்வாருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத பிடி வாரண்ட்டை காசியாபாத்தில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் கடந்த வாரம் பிறப்பித்தது. இதையடுத்து நுபுர் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவரது மனுவை விசாரித்த ஏ.கே. பட்நாயக் மற்றும் ஜே. எஸ். கோகர் அடங்கிய பெஞ்ச் அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட வாரண்டுக்கு தடை விதிக்க மறுத்ததோடு அவரை நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் கடந்த 30ம் தேதி காசியாபாத்தில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் சரணடைந்தார். நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்ட அவரின் ஜாமீன் மனுவை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து அவர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பை முதலில் செவ்வாய்க்கிழமைக்கும், பிறகு இன்றும் ஒத்திவைத்தது. இதையடுத்து நுபுர் தல்வார் தஸ்னா சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தனது ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் வரை உண்ணாவிரதத்தில் குதித்தார்.
இந்நிலையில் அவரது ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வெளியாக சில நிமிடங்கள் இருக்கும்போது அவர் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். நுபுரை வெளியே விட்டால் அவர் சாட்சியங்களை அழித்துவிடுவார் என்று செஷன்ஸ் நீதிமன்றம் அஞ்சுவதால் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதயைடுத்து அவர் ஜாமீன் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடும் என்று தெரிகிறது. அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும் அடுத்த 11 நாட்கள் அவர் சிறையில் தான் இருந்தாக வேண்டும். ஏனென்றால் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த 10ம் நாள் தான் அது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
தற்போது நுபுர் தஸ்னா சிறையில் வார்டு 13ல் 69 கைதிகளுடன் அடைத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.