தமிழக மீனவர்களைப் படுகொலை செய்த இத்தாலிய கப்பல் நாட்டை விட்டு வெளியேற நிபந்தனை அனுமதி
டெல்லி: கேரள கடற்பரப்பில் தமிழக மீனவர்களைப் படுகொலை செய்த இத்தாலிய கப்பலை நிபந்தனையுடன் நாட்டை விட்டு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கேரள கடற்பரப்பில் இத்தாலிய சரக்குக் கப்பலில் சென்ற பாதுகாப்புப் படையினர் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர்கள் இருவர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் நீண்ட இழுபறிக்குப் பிறகு கைது செய்யப்பட்ட இத்தாலிய பாதுகாப்புப் படையினர் இருவரும் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ1 கோடி கொடுத்து தமது பாதுகாப்புப் படையினர் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வைத்தது இத்தாலிய அரசு.
இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்துக்குச் சென்றது. இந்த வழக்கில் இத்தாலிய அரசு கோடி கோடியா கொட்டிக் கொடுத்து பாதிக்கப்பட்டோரின் வாயை அடைத்திருக்கும் செயலை வன்மையாகக் கண்டித்திருந்தது. மேலும் இத்தாலியக் கப்பலில் இருந்த பாதுகாப்புப் படையினர் மேலும் 4 பேரை தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம் என உறுதிவழங்க முடியுமா என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு இன்று பதிலளிப்பதாக இத்தாலிய அரசு வழக்கறிஞர் ஹரீஷ் ஷால்வே தெரிவித்திருந்தார்.
இன்றைய விசாரணையில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிபந்தனையை ஏற்பதாக இத்தாலிய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உறுதியளித்தார். இதையடுத்து நாட்டை விட்டு வெளியேற இத்தாலிய கப்பலுக்கு உச்சநீதிமன்ற்ம அனுமதி அளித்தது.
மேலும் கேரள உயர்நீதிமன்றத்தில் ரூ3 கோடிக்கான பிணைப் பத்திரத்தையும் தாக்கல் செய்யுமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.