இலங்கை சென்ற நாடாளுமன்றக் குழு பிரதமரை சந்திக்கிறது
டெல்லி: இலங்கை சென்று வந்த சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழு நாளை பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளனர்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்த நிலையிலும் ஈழத் தமிழர்களுக்கான மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று தொடர்ந்து புகார் கூறப்பட்டு வந்தது. இதை இலங்கை அரசும் நிராகரித்து வந்தது.
இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான இந்திய எம்.பிக்கள் குழு இலங்கை சென்று பார்வையிடும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தால் இந்திய எம்.பிக்கள் குழுவின் பயணம் கேள்விக்குறியாக இருந்தது.
இநிந்லையில் கடந்த ஏப்ரல் 16-ந் தேதி முதல் 21-ந் தேதி இந்திய எம்.பி.க்கள் 12 பேர் இலங்கைக்குக்குச் சென்றனர். இக்குழுவில் இடம்பெற்றிருந்த அதிமுகவும் திமுகவும் கடைசிநேரத்தில் விலகிக் கொண்டன. இதைத் தொடர்ந்து இலங்கை சென்ற எம்.பிக்கள் குழு தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டனர். இலங்கையின் மிகப்பெரிய அகதி முகாமான மாணிக்கம் பண்ணை முகாமில் உள்ள 6 ஆயிரம் தமிழர்கள் ஜூன் மாதத்துக்குள் அவர்களது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று இலங்கை அரசு உறுதியளித்திருப்பதாக எம்.பிக்கள் தெரிவித்திருந்தனர். இந்திய அரசின் உதவித் திட்டங்களும் அங்கு தொடங்கி வைக்கப்பட்டன.
இக்குழுவினர் நாளை பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து தாங்கள் கேட்டறிந்த விவரங்களை விளக்கம் அளிக்க உள்ளனர்.