குமரியில் ரூ.5க்கு நாட்டு வெடிகுண்டு விற்பனை: போலீசார் தீவிர விசாரணை
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் 5 ரூபாய்க்கு நாட்டு வெடிகுண்டு விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவல்களின் பேரில் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. குமரியில் நாட்டு வெடிகுண்டுகள் சர்வ சாதாரணமாக கிடைக்கும் நிலை உள்ளது. அண்மையில் அங்குள்ள ஒரு கிராமத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 64 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. பின்னர் அவை அழிக்கப்பட்டன.
குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள குவாரிகளில் அனுமதியின்றி வெடிமருந்துகள் வைக்கப்பட்டு பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படுகி்ன்றன. இந்த குவாரிகளில் போலீசார் சோதனை நடத்தி அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள வெடிமருந்துகளை பறி்முதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டத்தில் நாட்டு வெடிகுண்டுகள் ஒன்று 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வெடிகுண்டுகள் கொண்டு வரப்படுகின்றன. இவை வாகனங்கள் மூலமாகவும், படகுகள் மூலமாகவும் கொண்டு வரப்படுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி வரும் கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள சோதனைச்சாவடிகளில் இதற்காக சோதனையை தீவிரப்படுத்தவும் போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் வெடிகுண்டு வாங்கி வரும் மற்றும் விற்பனை செய்யும் கும்பல் போலீஸ் பிடியில் சிக்கும் என்று தெரிகிறது.