சவூதியில் மர்மமாக இறந்த கடையநல்லூர் டிரைவர்: உடலை ஊருக்கு கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை
கடையநல்லூர்: சவூதி அரேபியாவில் இறந்த தமிழரின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் நெல்லை கலெக்டர் செல்வராஜ் மற்றும் அமைச்சர் செந்தூர் பாண்டியன் உள்ளிடோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணன் கோவில் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வேலு என்பவரின் மகன் பரமசிவன். அவர் கடந்த 10 ஆண்டுகளாக சவூதி அரேபியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். கடந்த 26ம் தேதி அவர் திடீரென மர்மமான முறையி்ல் இறந்துவிட்டார். இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அவர்கள் பரமசிவனின் உடலை ஊருக்கு அனுப்பி வைக்க சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை உடல் வந்து சேரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ், அமைச்சர் செந்தூர் பாண்டியன், தென்காசி எம்.பி. லிங்கம் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இறந்து போன பரமசிவத்திற்கு சித்ரா என்ற மனைவியும், அபிநயஸ்ரீ என்ற மகளும், வெங்கடேஷ் என்ற மகனும் உள்ளனர். பரமசிவன் கடந்த ஆண்டு விடுமுறையில் ஊருக்கு வந்துவிட்டு சவூதி திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.