குண்டுவெடிப்பு: பாஜக மாநாடு, சித்திரைத் திருவிழாவுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
மதுரை: மதுரையில் நேற்று நடந்த சைக்கிள் வெடிகுண்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து பாஜக மாநில மாநாடு நடைபெறும் பகுதி, சித்திரைத் திருவிழா ஆகியவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மக்களை அச்சுறுத்தவும், அமைதியை சீர்குலைத்து பீதியை ஏற்படுத்தும் வகையிலும் நேற்று சைக்கிள் வெடிகுண்டு மூலம் சிலர் பீதியை ஏற்படுத்தியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பு யாரையும் குறித்து வைக்கப்படவில்லை. மாறாக பொது அமைதியை சீர்குலைத்து, மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பும் வகையிலேயே இது நடந்துள்ளதாக போலீஸார் ச்நதேகிக்கின்றனர்.
மிகவும் சக்தி குறைந்த குண்டையே விஷமிகள் வைத்துள்ளனர். இதன் மூலம் பீதியை ஏற்படுத்துவதே அவர்களின் முக்கிய நோக்கமாக தெரிவதாக போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.
சித்திரைத் திருவிழா நடந்து கொண்டிருப்பதாலும், பாஜக மாநில மாநாடு நடைபெறவுள்ளதாலும் அதில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கம் இதில் புதைந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து பாஜக மாநாடு நடைபெறவுள்ள பகுதி மற்றும் சித்திரைத் திருவிழா ஆகியவற்றுக்கான பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.