கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி மாற்றம்: மும்பை செல்கிறார்
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குனராக இருந்த காசிநாத் பாலாஜிக்கு மும்பை பாபா அணுமின் நிலையத்தின் செயல் இயக்குனராக பதவி உயர்வு கிடைத்துள்ளது.
கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குனராக இருந்து வந்தவர் காசிநாத் பாலாஜி. அவருக்கு மும்பையில் உள்ள பாபா அணு மின் நிலையத்தின் செயல் இயக்குனராக பதவி உயர்வு கிடைத்துள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில்,
கடினமான தருணங்களை எதிர்த்து நின்று அவற்றை கடந்து வந்ததில் மகிழ்ச்சி. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள முதல் அணு உலையில் விரைவில் மின் உற்பத்தி துவங்கும். நான் மும்பையில் இருந்தாலும் கூடங்குளம் அணு மின் நிலையம் தனது இலக்குகளை அடைவதைக் காண விரும்புகிறேன் என்றார்.
இதையடுத்து காசிநாத் பாலாஜிக்கு பதில் புதிய வளாக இயக்குனராக ஆர்.எஸ்.சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதுவரை அணு மின் நிலைய இயக்குனராக இருந்தார். சுந்தருக்கு பதிலாக ஹிரிநாராயண் சாஹு இயக்குனராகவும், சாஹுவுக்கு பதில் எஸ்.வி. ஜின்னா தலைமை கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.