கருணாநிதியின் டெசோவால் திமுக-காங். உறவு பாதிக்குமா? ஜி.கே. வாசன் பேட்டி
திருச்சியில் நடந்த ஐ.என்.டி.யூ.சி மாநில மாநாட்டில் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,
கேள்வி: ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தனி ஈழம் மட்டும் தான் தீர்வு என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மேலும் மீண்டும் டெசோ அமைப்பையும் அவர் துவங்கியிருப்பதால் திமுக-காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்படுமா?
பதில்: ஈழத் தமிழர்களின் மறுவாழ்வையும், வாழ்வாதாரத்தையுமே நாங்கள் கவனமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதனாலேயே ஐ.நா. மனித உரிமைக் குழு கூட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. மேலும் மத்திய அரசு எதிர்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான எம்.பி.க்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பியது. அந்த குழு இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து ஈழத் தமிழர்களின் மறு வாழ்வுத் திட்டத்தை அவரிடம் கொடுத்துவிட்டு தான் வந்துள்ளது.
கேள்வி: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுமா?
பதில்: ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுக உள்ளது. அதனால் தேர்தல் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் அகில இந்திய பொதுச் செயலாளருக்கு அறிக்கை அனுப்புவார். அதன் பிறகே காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து அகில இந்திய பொதுச் செயலாளர் அறிவிப்பு வெளியிடுவார்.
கேள்வி: காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாராபட்சம் காட்டுவதாக குற்றம்சாட்டப்படுகிறதே?
பதில்: மாநிலத்தின் வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. காங்கிரஸ் அரசு, கூட்டணி கட்சிகள் ஆளும் அரசு, எதிர்க்கட்சிகள் ஆளும் அரசு என்றெல்லாம் நாங்கள் பிரித்துப் பார்ப்பதில்லை. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதும் இல்லை.
கேள்வி: என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சனையைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்தப்படுமா?
பதில்: என்.எல்.சி சுரங்கத் தொழிலாளர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே, இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.