டெல்லியில் இன்று மாநில முதல்வர்கள் மாநாடு- தேசிய தீவிரவாத தடுப்பு மையம் பற்றி ஆலோசனை
தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக, தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க மத்திய அரசு செய்தது. ஆனால் மத்திய அரசின் ஒருதலைபட்சமான இந்த முடிவால் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக தமிழகம், ஒடிசா, மேற்குவங்கம், குஜராத் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இதனால் தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தை அமைக்கும் முயற்சியை மத்திய அரசு ஒத்திவைத்தது. பின்னர் இது தொடர்பாக விவாதிக்க மாநில முதல்வர்கள் மாநாடு நடத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது.
இன்று நடைபெறும் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் தொடர்பான மாநில முதல்வர்கள் மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கூட மத்திய அரசின் தேசிய தீவிரவாத தடுப்பு மையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இன்றைய மாநாட்டில் கடுமையான விமர்சனங்களை மத்திய அரசு எதிர்கொள்ள நேரிடலாம்.
முன்னதாக தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தின் செயல்பாடு குறித்த வரைவு நகலை எதிர்ப்புத் தெரிவித்துள்ள மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்திருந்தது. அதில் மாநிலங்களுடன் ஆலோசித்தே தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.