ஆக்சிஜனுக்குப் பதில் நைட்ரஸ் ஆக்சைடு சிலிண்டர் பொருத்தியதால் கோமாவில் இருந்த பெண் மரணம்
வேலூர்: அறுவை சிகிச்சையின் போது ஆக்சிஜன் சிலிண்டருக்குப் பதில் நைட்ரஸ் ஆக்சைடு சிலிண்டர் பொருத்தப்பட்டதால் ஓராண்டாக கோமா நிலையில் இருந்த பெண் மரணமடைந்துள்ளார்.
நாகர்கோவில் அடுத்த செம்பொன் விளையை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி ருக்மணி. இவர்களுக்கு சுபாஷ் என்ற மகனும், அமிர்தவர்ஷினி என்ற மகளும் உள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் குடும்ப கட்டுப்பாட்டு சிகிச்சைக்காக ருக்மணி ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நைட்ரஸ் ஆக்சைடு
அவருக்கு அறுவை சிகிச்சை நடந்த போது ஆக்சிஜன் சிலிண்டருக்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு சிலிண்டர் பொருத்தப்பட்டது. சில நிமிடங்கள் கழித்தே சிலிண்டர் மாறிய விவகாரம் தெரிய வந்தது. உடனடியாக அந்த சிலிண்டரை கழற்றி விட்டு ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தினர். அதற்குள் ருக்மணி கோமா நிலைக்கு சென்று விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக டாக்டர்கள் முத்துசெண்பகம், எட்வர்ட் ஜாக்சன், மகேஸ்வரி, நர்சுகள் அனிதா, விஜயகுமாரி, மருந்தாளுனர் சிவகலை, எசிடோர், சண்முகசுந்தரநாயகி ஆகிய 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு சில மாதஙகள் கழித்து மீண்டும் பணிக்கு சேர்க்கப்பட்டனர்.
ஓராண்டாக கோமா
கோமா நிலையில் இருந்த ருக்மணி மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சுமார் 1 ஆண்டாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் உடல் நிலை தொடர்ந்து மோசமானது.
வழக்கு
மனைவியின் இந்த நிலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ருக்மணியின் கணவர் கணேசன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் ருக்மணிக்கு தேவையான சிகிச்சை அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் சென்னையில் இருந்து மருத்துவ குழு வந்து பரிசோதனை செய்ய வேண்டும். ருக்மணியின் கணவர், குழந்தைகள் மதுரையில் தங்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
வேலூரில் மேல்சிகிச்சை
அதன்படி சென்னை அரசு பொது மருத்துவமனையில் இருந்து மருத்துவ குழு வந்து பரிசோதனை செய்தனர். ஆனாலும் உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இதற்கிடையே கடந்த பிப்ரவரியில் ருக்மணியை உயர் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு மாற்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கான செலவை அரசே ஏற்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று இறந்து போனார்.