சுரண்டையில் மர்ம காய்ச்சலுக்கு நர்சிங் கல்லூரி மாணவி பலி
கடையநல்லூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக மர்ம காய்ச்சல் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. இந்த மர்ம காய்ச்சலுக்கு காயிதே மில்லத் தெருவைச் சேர்ந்த அப்துல் மஜீத் என்பவரது மனைவி ரகுமாள் பலியானார்.
அவரையடுத்து ஒரு சிறுவன் பலியானான். மேலக்கடையநல்லூர் பவுண்ட்த் தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ் என்பவரின் மகன் சந்துரு (5) மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடையநல்லூர், தென்காசி, திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறறு சிகிச்சை பலனளிக்காமல் பலியானான். சிறுவன் மர்ம காய்ச்சலுக்கு பலியானது பொதுமக்களிடையே குறிப்பாக தாய்மார்களிடையே மிகுந்த பதட்டத்தையும், பீதியையும் ஏற்படுத்தியது. மேலும் இக்காய்ச்சலுக்கு கடையநல்லூர், வடகரை ஆகிய பகுதிகளில் 8 பேர் வரை இறந்த நிலையில் நேற்று மாலை தென்காசி வாய்க்கால் பாலம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சீனிவாசன் மகள் பேச்சியம்மாள் (14) என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். வடகரை, கடையநல்லூர் பகுதியில் பரவிய மர்ம காய்ச்சல் தற்போது தென்காசியிலும் பரவத் தொடங்கியுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சாதாரண தலைவலி, காய்ச்ச்ல கூட மர்ம காய்ச்சலாக இருக்குமோ என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் சுரண்டையில் ஒரு நர்சிங் கல்லூரி மாணவியும் மர்ம காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார். சுரண்டை அருகே சுந்தரபாண்டியபுரம் தேரடி தெருவைச் சேர்ந்தவர் ஐஸ் வியாபாரி மாயாண்டி. இவரது 3வது மகள் சிவசுப்பு. கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார். கடநத 3 நாட்களுக்கு முன் சிவசுப்புவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை சுரண்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தண்ணீர் ஆகாரம் மட்டுமே குடித்து வந்த அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து அவரை பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் காலை அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.