சென்னை: சென்னையில் அடுத்த ஆண்டு ஆசிய தடகள சாம்பியன் போட்டிகள் நடைபெறுமென்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 44 நாடுகளைச் சேர்ந்த தடகள விளையாட்டு வீரர்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.இது தொடர்பாக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:தினப் பயிற்சி திட்டம்சர்வதேச அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில், தினப்பயிற்சி திட்டத்தின் மூலம் முழுமையான பயிற்சி அளித்தல், பன்னாட்டு தரத்தில் விளையாட்டு மைதானங்கள் அமைத்தல், உள் விளையாட்டு அரங்கங்களை அமைத்தல், ஊக்கத்தொகை அளித்தல் போன்ற திட்டங்கள் விளையாட்டுத் துறையின் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.கிராம விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளிலும் விளையாட்டினை மேம்படுத்தும் வகையில் கிராம இளைஞர் மேம்பாட்டு விளையாட்டுத் திட்டத்தின் கீழ் விளையாட்டு கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இனிவரும் காலங்களில் ஆண்டுதோறும் 25 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் கிராம விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.சென்னையில் ஆசிய தடகளப் போட்டி ஆசிய தடகளப் போட்டிகளை இந்தியாவில் நடத்திட ஆசிய தடகள கழகம் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்திய தடகள சம்மேளனம் ஆசிய தடகளப் போட்டிகளை 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்புடன் நடத்திட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் போட்டிகளில் 44 நாடுகளைச் சார்ந்த தடகள விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.செயற்கை இழை தடகள ஓடுபாதைஇந்தப் போட்டிகளை சிறப்புற நடத்திட சென்னை நேரு விளையாட்டரங்கில் உள்ள செயற்கை இழை தடகள ஓடுபாதை மாற்றியமைக்கப்படுவதோடு, புதிய பயிற்சி செயற்கை இழை தடகள ஓடுபாதை ஒன்றும் அமைக்கப்படும். தற்போதுள்ள வசதிகள் அனைத்தும் உலக தரத்திற்கு உயர்த்தப்படும். வீரர் வீராங்கனைகளுக்கான வசதிகளுக்காக ரூ40 கோடி செலவிடப்படும் என்பதையும் மன நிறைவுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.